Join us on Facebook

Please wait..10 Seconds Cancel
செய்தி

கண்ணா லட்டு தின்ன ஆசையா: பாக்யராஜ் ஏன் திடீரென எகிறினார்? அரசியல் கண்ணா அரசியல்!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா: பாக்யராஜ் ஏன் திடீரென எகிறினார்? அரசியல் கண்ணா அரசியல்!!
10th January 2013 1.37AM

கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை யாருடையது என்ற இழுபறியில், இராம.நாராயணன், கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, பாக்யராஜ் என்று பெரிய தலைகள் எல்லாம் இழுத்து விடப்பட்டு இருக்க, இதற்குள்

 உள்ள நிஜமான விவகாரம் அந்த ‘கதை’ அல்ல என்கிறது ஒரு சோர்ஸ். அப்படியானால் என்ன விவகாரம்? பணமா? அதுவும் கிடையாதாம்.


நிஜ விவகாரம் அரசியல் தானாம்!


“எனது கதையைதான் படமாக்குகிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார், கே.பாக்யராஜ். ஆனால், சந்தானம் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை, தம்முடைய கதைதான் என்பது பாக்யராஜூக்கு ஏற்கனவே தெரியுமாம்.


அவ்வப்போது சந்தானத்தை சந்திக்கும் போதெல்லாம், இந்த சீனை எப்படி எடுத்தீங்க, அந்த சீன் எப்படி வந்திருக்கு என்றெல்லாம் பாக்யராஜ் விசாரித்து வந்தததாகவும் சந்தானம் தரப்பினர் கூறுகிறார்.


கதைக்கு வழக்கு போடுவதென்றால், அவர் எப்போதோ போட்டிருக்கலாம். அல்லது, இப்போது எழுப்புகிற பிரச்சனையை அப்போது அவர் எழுப்பியிருந்தால் கூட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம்.


ஆனால் படம் வெளியாகிற கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று பாக்யராஜின் செயலை கவலையோடு அலசுகிறது சந்தானம் வட்டாரம்.


இதில் மற்றொரு விவகாரம், பாக்கியராஜின் ‘டார்கெட்’, சந்தானம் அல்ல, இராம.நாராயணன்தான் என்கிறார்கள். அங்கேதான் வருகிறது அரசியல்.


யானை, பாம்பு என்று மிருகங்களை வைத்து படம் எடுப்பவர் என்றுதான் இராம.நாராயணன் பற்றி பலருக்கு தெரியும். ஆனால், அவர் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது எந்த விவகாரத்தையும் தன் நேர்மையான ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் அப்ரோச்சால் தீர்த்து நல்ல பெயரை வாங்கியவர். அவரது நேர்மையில் அனைத்து தரப்புக்கும் நம்பிக்கை அதிகம்.


அப்படிப்பட்டவர் மீது திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் கொடுத்திருக்கும் புகார்தான், இதில் அரசியல் உள்ளது என்று சொல்லாமல் சொல்கிறது.


இராம.நாராயணன் தி.மு.க. ஆதரவாளர் என்பதில் ரகசியம் ஏதுமில்லை. அதே நேரத்தில் பாக்யராஜ், அண்மைகாலமாக தி.மு.க.-வின் மீது அதிருப்தியில் இருக்கிறாராம். முதல்வரை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.-வில் இணைய திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக முன் அனுமதி கேட்டு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


அதற்கு அட்டகாசமான விசிட்டிங் கார்ட், இந்த புகார் என்கிறார்கள்.


இதற்குள் மற்றுமொரு விவகாரமும் உண்டு.


‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நிஜ தயாரிப்பாளர் யார் என்பதிலும் பல கிசுகிசுக்கள் உண்டு. சந்தானமும், இராம.நாராயணனும் தயாரிப்பாளர்கள் என்கிறார்கள். இவர்கள் இருவருமல்ல, பவர் ஸ்டார்தான் என்கிறார்கள், பவர் ஸ்டார் ஊடாக பாய்வது முன்னாள் பெரிய இடத்து வெள்ளம் என்கிறார்கள்…


அடுத்தது, க.ல.தி.ஆ படத்தை வெளியிடுவது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயன்ட் நிறுவனம், வெளிப்படையாக அறிவிக்காமல், பேசி வருகிறது. நேரடியாக தமது பெயரில் வெளியிடுவார்களா, அல்லது வேறு பெயரிலா என்றும் ஒரு ஆப்ஷன் உள்ளது.


கூட்டிக் கழித்து, சந்தானத்தை தவிர்த்து விட்டு பார்த்தால், க.ல.தி.ஆ. படத்தில், கருப்பு-சிவப்பு (தி.மு.க.) சாயம் பலமாக உண்டு. பாக்கியராஜின் புகாரின் காரணமும் அதுதான் என்கிறார்கள்.


பாக்கியராஜ் கார்டன் பக்கம் விஜயம் செய்யும்வரை, எல்லாமே மாய மந்திரமாக இருக்கும்!


சினிமாஉலம்.கொம் செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்க்கு ஒரு இணைப்பை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே நாங்கள் செய்திகளை அனுப்ப முடியும்.

Enter your email address: