23rd November 2012 2.52PM
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு, வரலக்ஷ்மி, விடிவி கணேஷ், ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், சந்தானம், பிரேம்ஜி சிறப்புத் தோற்றத்திலும்
நடித்திருக்கும் படம் போடா போடி. வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தமிழன் தமிழனாகத் தான் இருக்கவேண்டும். தமிழ்ப் பெண்களும் தமிழ் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பன போன்ற முக்கிய செய்திகளை சொல்ல முயற்சி செய்துள்ள படம்.
சென்னையில் பிறந்து வளர்கிறார் சிம்பு. தற்போதைய இளைஞர்களின் கனவைப் போல, அனிமேஷன் துறையில் மிகப்பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு லண்டனில் செட்டிலாகி லண்டன் வாசியாகவே இருக்கும் சிம்புவின் சித்தப்பா விடிவி கணேஷ் வீட்டிற்குச் செல்கிறார். படிப்பை முடித்து தனது லட்சியத்தை அடைய காத்திருக்கும் இடைப்பட்ட சமயத்தை நிரப்ப ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதியோடு இருக்கும் சிம்புவின் கண்ணில் படுகிறார் வரலக்ஷ்மி.
லண்டனிலேயே பிறந்து வளர்ந்தாளும் தமிழ் பெண் என்பதால் நச்சுனு இருக்கும் நாட்டாமை பெண்ணின் மீது காதல்கொள்கிறார் சிம்பு. காதல், கசமுசா என சிம்புவின் வழக்கமான நடிப்புடன் ஒவ்வொரு நிமிடமும் நகர்கிறது. காதல், செக்ஸ், சண்டை, சிரிப்பு என அனைத்தையும் டச் செய்துவிட்டு படத்தின் மெயின் ஸ்டோரிக்குள் நுழைகிறார் இயக்குனர்.
உலக அளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற சால்சா நடனமாடி வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் வரலக்ஷ்மி. நடனம் என்றாலே பிடித்து, இழுத்து ஆட வேண்டி இருக்கும். அதிலும் சால்சா நடனம் ஆடும் போது ரப்பர் போல வளைந்து நெளிந்து இருவரும் ஒருவராக ஆட வேண்டும். ஆண் பயிற்சியாளருடன் வரலக்ஷ்மி சால்சா நடனமாடுவதைப் பார்க்கும் சிம்பு கொதித்துவிடுகிறார்.
” வெளிநாட்டில் வாழ்வதால் நாம் வெள்ளைக்காரர்கள் ஆகிவிடமாட்டோம். தமிழனுக்கு என ஒரு கலாச்சாரம் இருக்கு. மனைவியை கட்டிய புருஷனைத் தவிர வேறு யாரும் தொடக் கூடாது என்பது தான் நமது கலாச்சாரம்.”போன்ற நல்ல வசனங்களைப் பேசுகிறார்.( ஆனால் அதை சிம்பு சொல்றாரே!சரி அவரோட சொந்த விஷயம் நமக்கு எதுக்கு)
லண்டனில் பிறந்து வளர்ந்த்தால் இப்படி இருக்கிறாள். திருமணமாகி ஒரு குழந்தை வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என விடிவி கணேஷ் கொடுக்கும் ஐடியாவை செயல்படுத்துகிறார் சிம்பு. சிம்பு தன்னை கட்டுப்படுத்த நினைப்பதாக உணரும் வரலக்ஷ்மி சிம்புவை விட்டு சென்றுவிடுகிறார்.
அதன்பிறகு மறுபடியும் இருவரும் ஒன்று சேர்தல், திருமணம், குழந்தை என கதைக்கு வெளியே சில காட்சிகள். குழந்தை பிறந்த பிறகு “நான் போட்டியில் கலந்துகொண்டு வென்றே ஆகவேண்டும்” என மெயின் ஸ்டோரிக்கு வருகிறார் வரலக்ஷ்மி. வேறு யாரும் தொட்டு ஆடக்கூடாது. உனக்கும் ஆடத் தெரியாது’ என்னதான் செய்வது என முட்டி மோதிக்கொண்டு நிற்கும் இருவரும் இந்த பிரச்சனையை எந்த வகையில் அணுகுகிறார்கள்? வரலக்ஷ்மியின் லட்சியம் நிறைவேறியதா? கதையுடன் இதுவரையிலும் சம்மந்தமே இல்லாத சிம்புவும் வரலக்ஷ்மியும் நடனமாடுவது போன்ற படத்தின் போஸ்டர்களுக்கும் கதைக்கும் இனி எப்படி தொடர்பு ஏற்படப்போகிறது? போன்ற
கேள்விகளுக்கு விடை தான் படத்தின் கிளைமேக்ஸ்.
சிம்பு வழக்கமா பன்ற எல்லாமே படத்துல இருக்கு. அவர் விளையாட்றதும், அவர் விரல் விளையாட்றதும்னு எல்லா விளையாட்டும் இருக்கு. நம்ம ஊர் நாட்டாமை பொண்ணா இருந்தாலும் ஃபாரீன்ல படிச்சதால நாட்டாமை பொண்ணு நச்சுனு இருக்கு. படத்தின் பெரும் பகுதி டான்ஸா இருந்தாலும் நல்ல நடனக் கலைஞரான ஷோபனாவை வீணாக்கிட்டாங்கனு சொல்லலாம். விடிவி கணேஷுக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்ததை நல்ல விதமா நடிச்சிருக்காரு.இசையமைப்பாளரான தரன்குமார் இரைச்சல் இல்லாத பின்னணி இசையையும், பாடல் வரிகளை விழுங்கும் அளவுக்கு இசையை கொடுக்காததும் நல்லது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இளைஞர்களுக்கு ஏற்ற படமா போடா போடியை கொடுக்க நினைத்து சரியா செஞ்சிருக்கார். உலக அளவில் நட்டக்கும் நடனப் போட்டி புதுசு இல்லை என்றாலும் இன்று உலகின் மிகச்சிறந்த நடனங்களாக கருதப்படும் நடனங்களுக்கு மூத்தது ’குத்து டான்ஸ்’தான் என்று சொல்வது புதுசு. ஹாலிவுட் படமான STEP UP படங்களின் காஸ்டியூம் அப்பட்டமாகத் தெரிவது படக்குழு கவனித்திருக்க வேண்டியது.
யூத்துகளுக்கு மட்டுமேயான படம். லவ் பன்றவங்க படத்துக்கு போனா நல்லா என்ஜாய் பண்ணலாம்.
போடா போடி - சிம்புவின் செக்ஸ் வெடி!