4th July 2012 11.22AM
இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 7-ந்தேதி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பின்னணி பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ள
இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை இனவெறி அரசு 2009-ல் கொத்துக் குண்டுகளையும், வேதி குண்டுகளையும் போட்டு 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்றது. இதை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது.
அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். 2010-ல் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோர் புறக்கணித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாடகர் மனோ உள்ளிட்டோர் எதிர்ப்பினால் கலந்து கொள்ளாமல் திரும்பி சென்றனர். தமிழ் நெஞ்சங்களுக்கு சிறு கஷ்டம் வருவது போலவும் நடக்க மாட்டோம் என்று மனோ அப்போது பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த 'பிக்மவுண் டெய்ன்' இசைக்குழுவும் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தது. தமிழா தமிழா நாளை நம்நாளே என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரன் குரலையே உலகம் கேட்க விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.